நாமக்கல் மாவட்டத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட - கரோனா முன்களப்பணியாளர்கள் 28,400 பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி :

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மையம் (யூனிட்) தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் சில தினங்களில் தொடங்கப்படும்.

மேலும், 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பிருக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 28,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE