நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் - தளர்வில்லா ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின : கடைகள் முழுமையாக அடைப்பு

திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடின.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசுமற்றும் தனியார் மருத்துவமனைகளும், ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகளும், பெட்ரோல் நிலையங்கள், ஆவின் பாலகங்கள் மட்டும் திறந்திருந்தன. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவுக்கு ஊழியர்கள் வந்திருந்தனர். வங்கிகளில் 3-ல் ஒரு பங்கு ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை செயல்பட்டன. ஆனால், வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள், முக்கிய பஜார் பகுதிகள்அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இல்லாமலும் வாகன போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடியிருந்தன. நகர மற்றும் கிராமப்புறபகுதிகளில் சிறிய வாகனங்களில் காய்கனி விற்பனை செய்யப்பட்டது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இ-பதிவு செய்தவர்களின் வாகனங்களை மட்டும் விசாரணைக்குப்பின் அனுமதித்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதிகளில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. கிராமப்பகுதிகளிலும் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அத்தியாவசிய தேவை எதுவும் இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வணிக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில மருந்துக்கடைகள் மற்றும் பால் கடைகள்மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன. வாகனங்கள் எதுவும் இயங்காததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அத்தியாவசிய காரணம் மற்றும் இ-பதிவு, இ-பாஸ் இல்லாதவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். வழக்கு பதிவு செய்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அடையாள அட்டைகளுடன் பணிக்குச் சென்றனர். இருசக்கர வாகனங்களில் பணிக்கு சென்றவர்களை மறித்து, நிறுவனங்கள் ஏற்பாடுசெய்யும் நான்கு சக்கர வாகனங்களில் தான் பணிக்கு செல்ல வேண்டும் என, போலீஸார் அறிவுறுத்தினர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி வி.வி.டி சந்திப்பு மற்றும் குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அவர் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000-க்கும்மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம்” என்றார்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து, பால் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில் மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் வலம் வந்தனர். அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், குலசேகரம், களியக்காவிளை. கருங்கல், திங்கள்நகர் மற்றும் முக்கிய பகுதிகள், கிராமப் பகுதிகள் எங்கும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் பங்க், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் இயங்கின.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவை மற்றும் முன்களப் பணியாளர்கள் தவிரசாலையில் சுற்றுவோர் எச்சரித்து அனுப்பப்பட்டனர். கரோனா ஊரடங்கை மதிக்காமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்