மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு செல்வதில் பிரச்சினையா? : தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு செல்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பெருந் தொற்று காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ள நிலை யில், காய்கறிகளை மார்க்கெட் பகுதிக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம்.

தோட்டக்கலை காய்கறி மற்றும் பழ வகைகளை சந்தைக்கு கொண்டு செல்ல ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது மழை காரணமாக காய்கறி பயிர்கள் சேதமானாலோ சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் தெரிவித்து அதற்கான உதவியை பெறலாம்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் காய்கறி, பழங்களை அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமைகளில் அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு செல்லலாம்.

ஊரடங்கு காரணமாக நேரில் செல்வதை தவிர்த்து தொலைபேசி வாயிலாக உதவி இயக்குநரிடம் ஆலோசனை பெற்று உதவி பெற தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 88385-17900, ஜோலார்பேட்டை மற்றும் நாட்றாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 90434-93204, மாதனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 96551-93927, கந்திலி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 94431-43445, திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 73391-65526 ஆகிய தொலைபேசி எண்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE