திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்கு - காய்கறி மார்க்கெட் இடமாற்றம் :

கூட்ட நெரிசலை குறைக்க திருப் பத்தூர் பேருந்து நிலையத்துக்கு காய்கறி மார்க்கெட் இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது. கரோனா தொற்று அதிகரித்தால் மார்க்கெட் செயல்பாட்டில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா பரவலை குறைக்க பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த 2 வார கால முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான அத்தியா வசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒரு சில கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க பல்வேறு மாற்று ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் சக்தி நகர் பகுதியில் இயங்கி வந்தது. இங்கு. 160-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. இங்கு, பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் அதை தவிர்க்க காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

தற்போது, முழு ஊரடங்கு காலத்தில் பொது போக்கு வரத்துக்கு தடை விதிக்கப் பட்டிருப்பதால் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் நேற்று இரவோடு இரவாக மாற்றப்பட்டது.

இங்கு, சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்க இடம் பிரித்து ‘குறியீடு’ வரையப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முதல் ஊரடங்கு முடியும் வரை காய்கறி மார்க்கெட் புதிய பேருந்து நிலை யத்தில் செயல்படும். காய்கறி மார்க்கெட்டை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று ஆய்வு செய்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, “வழக்கம் போல் காய்கறி மார்க்கெட் அதிகாலை 6 மணியில் இருந்து பகல் 12 மணி வரை செயல்படும்.

பொதுமக்களும், வியாபாரி களும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மார்க்கெட் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்கறி கொண்டு வரும் வாகனங்கள் மட்டும் உள்ளே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வரும் வாகனங்கள் மார்க்கெட்டுக்குள் செல்ல அனுமதியில்லை. மார்க்கெட் செயல்பாட்டுக்கு வந்த பிறகு கூட்டம் மற்றும் தொற்று பரவல் அடிப்படையில் மேலும் சில விதிமுறைகள், நடைமுறைகள் அமல்படுத்த திட்டமிட்டிருக் கிறோம்’’ என்றார். அப்போது, திருப்பத்தூர் நகராட்சி ஆணை யாளர் சத்தியநாதன், சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், சுகாதார ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE