பட்டுக்கோட்டை அருகே - ஆம்னி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 5 பேர் காயம் :

பட்டுக்கோட்டையில் ஆற்றில் தனியார் ஆம்னி பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று காலை சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை மாதவன் என்பவர் ஓட்டியுள்ளார். பேருந்தில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஜாசிக் அகமது(21), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜோதிமணி(21), நதியா(33), ஜெஸ்வந்தி(12), நிவேதா(23) ஆகிய 5 பேர் பயணம் செய்தனர்.

பேருந்து, பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வரும் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 15 அடி உயரத்திலிருந்து நசுவினி ஆற்றுக்குள் பேருந்து விழுந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். ஓட்டுநர் மாதவன் காயமின்றி தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE