திருவள்ளூர் மாவட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளில் - அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் வேட்புமனு தாக்கல் :

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட 50 பேர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதில், கும்மிடிப்பூண்டி தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நாகராஜ் உட்பட 2 பேர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் பாலகுருவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பொன்னேரி (தனி) தொகுதியின் அதிமுக வேட்பாளரான, எம்எல்ஏ சிறுணியம் பலராமன், அமமுக வேட்பாளரான, முன்னாள் எம்எல்ஏ பொன்.ராஜா உள்ளிட்ட 5 பேர், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் செல்வத்திடம் மனுத் தாக்கல் செய்தனர்.

திருத்தணி தொகுதியின் அதிமுக வேட்பாளரான, முன்னாள் எம்பி கோ. அரி, திமுக வேட்பாளரான எஸ்.சந்திரன் உள்ளிட்ட 8 பேர், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சத்யாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

திருவள்ளூர் தொகுதியின் திமுக வேட்பாளரான, எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தாஸ் உட்பட 4 பேர், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மதுசூதனனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி உட்பட 3 பேர் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பிரீத்தி பார்கவியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், திமுக வேட்பாளர் சா.மு.நாசர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சார்லஸ் உள்ளிட்ட 8 பேர் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பரமேஸ்வரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மதுரவாயல் தொகுதியின் அதிமுக வேட்பாளரான, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ்குமார் உட்பட 5 பேர், மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் இளங்கோவனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

அம்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரான எம்எல்ஏ அலெக்சாண்டர், அமமுக வேட்பாளரான, முன்னாள் எம்எல்ஏ வேதாச்சலம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்புத் தென்னரசன் உட்பட 6 பேர் பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் விஜயகுமாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

மாதவரம் தொகுதியின் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் மூர்த்தி, அமமுக வேட்பாளர் தட்சணாமூர்த்தி உட்பட 3 பேர் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஜோதியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

திருவொற்றியூர் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், அதிமுக வேட்பாளரான, முன்னாள் எம்எல்ஏ. குப்பன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன் உட்பட 6 பேர், பெரு நகர சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் தேவேந்திரனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்