மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: புதிய ஐ.ஜி. உறுதி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள, மேற்கு மண்டல காவல் துறை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் ஆர்.தினகரன் கூறும்போது, "மேற்கு மண்டலத்தில் பொது மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வருவதால் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது" என்றார். பின்னர், மேற்கு மண்டல காவல் துறை அதிகாரிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். இவர், இதற்குமுன் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையராகப் பணியாற்றினார். கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டுவரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தினகரன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE