அரசு மருத்துவக் கல்லூரி பணியாளரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறியல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பாதுகாப்பு பணியாளரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினர் சோலை என்பவரை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முருகானந்தம் என்பவர் நேற்று அவதூறாக பேசி, தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவக் கல்லூரி அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அக்கட்சியின் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கணேஷ்நகர் போலீஸார் உறுதி அளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால், புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE