கரூர் ரயில் சந்திப்பு, சேலம் சாலையை இணைக்கும் சாலைப் பணிகளை தடுத்த ரயில்வே நிர்வாகம்

கரூர் ரயில் சந்திப்பு, சேலம் சாலையை இணைக்கும் அம்மா திட்ட சாலைப் பணிகளை ரயில்வே நிர்வாகம் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் ரயில் சந்திப்பு (ஜங்ஷன்), சேலம் புறவழி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் கரூரில் அம்மா திட்ட சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பெரியகுளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பாதைக்கு மேற்கு பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் அம்மா திட்ட சாலை அமைக்கப்பட்டு உள்ளதாகக்கூறி, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸ் பாதுகாப்புடன் ரயில்வே ஊழியர்கள் மூலம் சாலையின் குறுக்கே இரும்பு தண்டவாளங்களை நேற்று நட்டு, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆட்சியர் சு.மலர்விழி, கரூர் நகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் தண்டவாளம் நடப்பட்ட இடத்துக்கு வந்து, ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் சாலையின் குறுக்கே நட்ட இரும்பு தண்டவாளங்களை அகற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE