திருப்பத்தூரில் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகிறார்

திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் இன்று நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

தமிழகம் முழுவதும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். திமுக ஆட்சி அமைந்து தான் முதல்வராகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள என்.வைரவன்பட்டியில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணி அளவில் பேசுகிறார். இதற்காகப் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆங்காங்கே நிகழ்ச்சியைக் காண டிஜிட்டல் திரைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி வழங்க 150 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பண் எம்எல்ஏ செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE