கூட்டணி அமையாவிட்டால் தமிழகத்தில் தனித்து போட்டியிட அகில இந்திய மஜ்லிஸ் கட்சி முடிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமையா விட்டால் தனித்துப் போட்டியிடு வோம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.எஸ்.வகீல் அகமது தெரிவித்தார்.

அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஜெ.அலாவுதீன் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எச்.முகம்மது இக்பால், மாநில செய்தித் தொடர்பாளர் எஸ்.அகமது மீரான், கிழக்கு மாவட்டத் தலைவர் ஏ.காஜா அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநிலத் தலைவர் வகீல் அகமது, செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமையா விட்டால் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவோம். தமிழகத்தில் 3-வது அணி உருவாக வாய்ப்பு உள்ளது.

திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கட்சியின் தேசியத் தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்.பி கலந்து கொள்ள உள்ளார்.

பாஜக எங்களுக்கு எதிரிக் கட்சி. காங்கிரஸ் துரோகக் கட்சி. ஏனெனில், பல ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்