டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குழுமணியில் டிராக்டர் பேரணி

By செய்திப்பிரிவு

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குழுமணியில் நேற்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி மாவட்டம் குழுமணியில் நேற்று டிராக்டர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் டிபிகே.பிரசன்னா வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கு.ப.சிவபெரி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழுமணி எம்ஜிஆர் சிலையில் தொடங்கி, கோப்பு மற்றும் அயிலாப்பேட்டை தேர் வீதிகளைச் சுற்றி, மீண்டும் குழுமணி எம்ஜிஆர் சிலை அருகே டிராக்டர் பேரணி நிறைவடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியில் ஜல்லிக்கட்டு காளையொன்றும் அழைத்து வரப்பட்டது. பேரணியில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டம் குறித்து பிரசன்னா வெங்கடேசன் கூறும்போது, ‘‘விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாவிட்டால், அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தி, டெல்லிக்கு டிராக்டர் பேரணியோ அல்லது தமிழ்நாட்டில் இருந்து விவசாய விளைபொருட்களை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை எல்லைகளில் தடுத்து நிறுத்தும் போராட்டமோ நடத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்