காய்கனி விற்பனை வழக்கம்போல நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திருச்சியில் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி இன்று(நவ.24) முதல் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதில்லை எனவும், காய்கனி விற்பனை வழக்கம்போல நடைபெறும் எனவும் காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகளில் ஒரு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

கரோனா பரவலைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி முதல் மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து, காய்கனி மொத்த விற்பனை பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடை பெற்று வருகிறது.

தற்போது கரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும் என வியாபாரிகளில் ஒரு தரப்பினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தை திறக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்ட மனித வளர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது காந்தி மார்க்கெட்டை திறக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை நவ.26-ம் தேதியன்று மீண்டும் வரவுள்ளது.

இந்தநிலையில், காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க அனுமதிக்க வலியுறுத்தி, நவ.24-ம் தேதி(இன்று) மாலை 6 மணி முதல் காய்கனி விற்பனை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளருமான வீ.கோவிந்தராஜூலு நேற்று முன்தினம் அறிவித்தார்.

மேலும், வழக்கு விசாரணை யின்போது சாதகமான தீர்வு கிடைக்காவிடில் நவ.27-ம் தேதி காந்தி மார்க்கெட் முன் குடும்பத் தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது, அரசு வழங்கியுள்ள அடையாளச் சான்றுகளை மீண்டும் அரசிடமே ஒப்படைப்பது எனவும் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அந்த அறிவிப்பை வியாபாரிகளில் மற்றொரு தரப் பினர் ஏற்க மறுத்து, காய்கனி விற்பனை நிறுத்தம் மற்றும் கடை யடைப்பில் ஈடுபடப் போவதில்லை என்றும், வழக்கம் போல காய்கனி விற்பனை நடைபெறும் என்றும் நேற்று அறிவித்துள்ளனர். மதுரம் மைதானத்தில் க.ஜெய்சங்கர் என்பவர் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட் டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஜெய்சங்கர் கூறும் போது, “நாங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சில்லறை வியாபாரிகளில் 1,500 பேர் வரை உள்ளனர். எனவே, ஜி கார்னர், மதுரம் மைதானம், தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகிய இடங்களில் வழக்கம்போல காய்கனி விற்பனை நடைபெறும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்