மலைவாழ் மக்களுக்கு ஜாதிச்சான்று வழங்க கோரிக்கை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸார் மனு

ஏலகிரி மலைவாழ் மக்களின் பிள்ளைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா மற்றும் நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், ‘‘ஏலகிரி மலைக் கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு முறையாக ஜாதிச்சான்றிதழ் வழங்காமல் காலதாமதம் செய்யப்படுகிறது. ஜாதிச்சான்றிதழ் இல்லாமல் பள்ளிக் கூடங்களில் மாணவர்களை சேர்ப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

ஜாதிச்சான்றிதழ் கோரி அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இங்கு மட்டும் சான்றிதழ் வழங்காமல் இருப்பது மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE