தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் திரளும் மக்கள் திருச்சியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் காவல் துறையினருக்கு ஒத்துழைக்க மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகை நெருங்கு வதால், திருச்சி மாநகரிலுள்ள கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, பொதுமக்களின் பாது காப்புக்காகவும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாகவும் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை நேற்று திறந்துவைத்த மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை யொட்டி, திருச்சி மாநகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றத்தில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிந்து கைது செய்வதற்காகவும் கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் 127 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தெப்பக் குளம் பகுதியில் தற்காலிக புறக் காவல் நிலையம் அமைக் கப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கண்கா ணிக்கும் வகையிலும், தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இங்கு வரக்கூடிய பொது மக்கள், தங்களின் உடைமைகள், நகைகள், பணத்தை பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சந்தேக நபர்கள் குறித்து உடன டியாக அருகிலுள்ள காவலர்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

குற்றச் செயலில் ஈடுபடக்கூடி யவர்களை கண்காணிப்பதற்காக நேதாஜி சபாஷ் சந்திரபோஸ் சாலை(என்எஸ்பி சாலை), பெரியகடைவீதி சந்திப்பு, சிங்கா ரத்தோப்பு, மெயின்கார்டுகேட், தெப்பக்குளம், சந்துக்கடை, அஞ்சுமன் பஜார், பெரியகடை வீதி முகப்பு ஆகிய 8 இடங்க ளில் கோபுரங்கள் அமைக்கப் பட்டு, பைனாகுலர் மூலம் கண்கா ணிக்க காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள நிறுவனங்களின் வாசல்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களும், சாலையை நோக்கி திருப்பி வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்றப்பிரிவு காவலர்கள் 100 பேர் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு, குற்றத் தடுப்பு, போக்குவரத்து ஒழுங்கு ஆகியவற்றுக்கும் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவும் இக்காலத்தில், கடைவீதி களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியா தவர்களை கடைகளுக்குள் அனும திக்கக்கூடாது என வியாபாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத வியாபாரி கள், பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தன்னார்வலர்களுடன் இணைந்து, இலவச முகக் கவசம் வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான முறை யில் பண்டிகையைக் கொண்டாட காவல் துறையினரின் நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

பேட்டியின்போது மாநகர காவல் துணை ஆணையர்கள் பவன்குமார் ரெட்டி(சட்டம், ஒழுங்கு), வேதரத்தினம்(குற்றம் மற்றும் போக்குவரத்து) மற்றும் உதவி ஆணையர்கள், இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்