பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதியுடன் முடிந்தது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 7.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இவர்களது விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்.1) தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. தொடர்ந்து திருத்துதல் பணிகள் இன்று தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இப்பணியில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 6-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE