சாலை விபத்தில் சிக்கி இலங்கை அமைச்சர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அந்நாட்டின் இணை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார்.

இலங்கையில் குடிநீர் வழங்கல்துறை இணை அமைச்சராக இருந்தவர் சனத் நிஷாந்த (48). இவர்நேற்று அதிகாலையில் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் கார் உருக்குலைந்தது. அமைச்சர் உள்ளிட்ட 3 பேர் காருக்குள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் மூவரையும் மீட்டு ராகம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது மெய்க்காவலர் ஜெயக்கொடி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் டிரைவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சனத் நிஷாந்த, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர். புத்தளம் மாவட்டத்தில் இருந்து இலங்கைநாடாளுமன்றத்துக்கு இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE