ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் அணை தகர்ப்பு: வெள்ளத்தில் சிக்கிய 17,000 பேர் மீட்பு

By செய்திப்பிரிவு

கெர்சன்: உக்ரைனின் மிகப்பெரிய அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதையடுத்து அந்த அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதையடுத்து, அணைப் பகுதியில் சுற்றி வெள்ளத்தில் சிக்கிய 17,000 பேரை பத்திரமாக மீட்டுள்ளதாக உக்ரைன் புதன்கிழமை தெரிவித்தது.

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனை எடுத்துக்காட்டும் வகையில், உக்ரைனில் உள்ள ககோவ்கா அணையின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பெரும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதுதொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அணை உடைந்து வெளியேறி வரும் நீரால் 24 கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 17,000 பேரை இதுவரை மீட்டுள்ளதாக உக்ரைன் புதன்கிழமை தெரிவித்தது.

40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள டினிப்ரோ பகுதியிலிருந்து மேலும் 25,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரி கோஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அணை மேலும் உடைந்து தண்ணீர் வெளியேறும்பட்சத்தில் அது மிகவும் மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திற்கு குளிரூட்டும் நீரை ககோவ்கா அணை வழங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வருவது மேலும் பல உயிரிழப்புகளுக்கு காரணமாகி விடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனின் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அணையை உடைக்கும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை வெடிகுண்டு மூலம் சுற்றுச்சூழலுக்கு பேரழிவை உண்டாக்கும் நிகழ்வு என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு உலக நாடுகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து எதிர்வினையாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE