300 ஏக்கரில் ஆலை, 700 மில்லியன் டாலர் முதலீடு, 1 லட்சம் பேருக்கு வேலை: இந்தியாவில் ஃபாக்ஸ்கான் பலே திட்டம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்தியாவில் பெங்களூருவுக்கு அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் போன் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சுமார் 700 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாகவும், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது. இதை கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாளராக இயங்கி வருகிறது ஃபாக்ஸ்கான். தைவானை தலைமையிடமாக கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் முழுவதும் (இந்தியா உட்பட) தொழிற்சாலைகள் உள்ளன.

இந்நிலையில், இந்த புதிய தொழிற்சாலையை அமைப்பது தொடர்பாக ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு தலைமையில் ஒரு குழு பெங்களூருவுக்கு வந்துள்ளது. அவர்கள் அம்மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயணனை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிகிறது. மேலும், அக்குழுவினர் இந்த தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டதாகவும் அமைச்சர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நம் மாநிலத்தில் விரைவில் ஆப்பிள் போன்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். மேலும், இது பெங்களூருக்கு மட்டுமல்லாது மாநில அளவில் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும்” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE