எக்ஸ்-மெயில் வரவை உறுதி செய்த எலான் மஸ்க் | ஜி-மெயிலுக்கு மாற்று!

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ்-மெயில் எனும் இ-மெயில் சேவையின் வரவு குறித்து எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் உறுதி செய்துள்ளார். இது கூகுளின் ஜி-மெயிலுக்கு மாற்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் வசூலிப்பது வரையில் அது நீள்கிறது. தொடர்ந்து ட்விட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார். அதோடு பல்வேறு அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகம் செய்து வருகிறார்.

இந்நிலையில், எக்ஸ்-மெயில் எனும் இ-மெயில் சேவை குறித்த சூசக தகவலை அவர் பகிர்ந்துள்ளார். எக்ஸ் நிறுவனத்திகள் செக்யூரிட்டி இன்ஜினியர் குழுவில் பணியாற்றி வரும் நாதன் மெக்ராடி, எக்ஸ்-மெயிலை எப்போது அறிமுகம் செய்யப் போகிறோம் என ட்வீட் செய்திருந்தார். ‘Its Coming’ என அதன் வரவு குறித்து மஸ்க், பதில் ட்வீட் செய்துள்ளார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

அஸ்தமிக்கும் ஜி-மெயில்? - கூகுளின் ஜி-மெயில் சேவை ஷட்-டவுன் செய்யப்பட உள்ளதாக போலியான தகவல் ஒன்று வைரலானது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜி-மெயில் சேவை மூலம் பயனர்கள் மெயில் அனுப்பவும், பெறவும், ஸ்டோர் செய்யவும் முடியாது எனவும் சொல்லப்பட்டது. இதற்கு கூகுள் நிறுவனம், ‘ஜி-மெயில் இங்கேயே தான் இருக்கும்’ என விரைந்து பதில் தந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE