2G to 4G | ரூ.999-க்கு ரிலையன்ஸ் ஜியோவின் ‘ஜியோ பாரத்’ போன் அறிமுகம்: சிறப்பு அம்சம் என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் ‘ஜியோ பாரத்’ எனும் 4ஜி போனை ரூ.999-க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 2ஜி நெட்வொர்க் பயனர்களை 4ஜி நெட்வொர்க் பயனர்களாக மாற்றும் பலே திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஜியோ. இணைய இணைப்புடன் இயங்கக் கூடிய மலிவு விலையிலான போன் என ஜியோ இதனை பிராண்ட் செய்கிறது.

மாதாந்திர ரீசாரஜ் கட்டணத்தில் ஃப்யூச்சர் போன்களுக்கான மற்ற நெட்வொர்க் ஆப்பிரேட்டர்களுடன் ஒப்பிடும்போது இதன் கட்டணம் 30 சதவீதம் மலிவு என ஜியோ தெரிவித்துள்ளது. அதோடு இதில் 7 மடங்கு கூடுதலாக டேட்டா பயன்பாட்டை பயனர்கள் பெறலாம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

இந்த போனின் அடிப்படை ரீசார்ஜ் கட்டணம் ரூ.123. அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 14ஜிபி 4ஜி டேட்டாவை பயனர்கள் ஒரு மாத காலத்துக்கு இதில் பெறலாம். அதுவே மற்ற டெலிகாம் நிறுவனங்கள் ரூ.179 ரீசார்ஜ் கட்டணத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 2ஜிபி டேட்டாவை மட்டுமே தற்போது வழங்கி வருகின்றன.

ஜியோ பாரத் போனின் பீட்டா ட்ரையல் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. முதற்கட்டமாக சுமார் 10 லட்சம் ஜியோ பாரத் போன்களை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஜியோ. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இதன் விற்பனை ஒரே நேரத்தில் தொடங்க உள்ளது.

2ஜி நெட்வொர்க் பயன்பாட்டுக்கு விடை: ஜியோ பாரத் போன் இந்தியாவில் தற்போது ஃப்யூச்சர் போன்களை பயன்படுத்தி வரும் 250 மில்லியன் பயனர்களை டார்கெட் செய்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களை 4ஜி நெட்வொர்க் பயனர்களாக மடைமாற்றி நாட்டில் 2ஜி நெட்வொர்க் பயன்பாட்டுக்கு விடை கொடுப்பது தான் ஜியோவின் திட்டம்.

கடந்த 2015-ல் இந்தியாவில் பீட்டா சோதனை பயன்பாட்டுக்கு வந்தது ஜியோ. 2016-ல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு அறிமுகமானது. அது முதல் இந்திய டெலிகாம் துறையில் புதிய பாய்ச்சலை ஜியோ ஏற்படுத்தியது. அந்த வகையில் ஜியோ பாரத் போனும் சந்தையில் மாற்றத்தை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE