சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் பக்கங்களை முடக்க கோரிக்கை வைக்கவில்லை: சென்னை காவல்துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை முடக்க எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் நேற்று முடக்கப்பட்டது. சீமானின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial முடக்கப்பட்டது. சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று இந்தியாவில் கணக்கு நிறுத்திவைக்கப்படுவதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,"நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE