இலங்கையிலிருந்து படகில் கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கம் கடலில் தூக்கி வீசப்பட்டதா? - கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கடலோரக் காவல்படை படகில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா பகுதி மணலி தீவு அருகே ரோந்து படகை பார்த்ததும் பதிவு எண் இல்லாத பைபர் படகில் இருந்த 3 பேர் படகை நிறுத்தாமல் சென்றனர். அவர்களை கடலோரக் காவல்படையினர் கடலிலேயே விரட்டிப் பிடித்தனர்.

படகிலிருந்த வேதாளையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் பாம்பனைச் சேர்ந்த ஒருவரை மண்டபம் கடலோரக் காவல்படை முகாமுக்குக் கொண்டு சென்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வேதாளையில் உள்ள மேலும் 2 பேரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதற்கிடையே, மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தங்கம் தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து கடலோர காவல்படையின் நீச்சல் பிரிவு வீரர்கள் மூலம் தேடினர்.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 17.740 கிலோ கிராம் கடத்தல் தங்கத்தை கடலில்வீசிய நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தங்கத்தை மீட்டு6 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE