தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் திமுக ஆட்சி: இபிஎஸ் கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த திமுக ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள், குறிப்பாக திமுகவின் தொமுசவினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர். அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால், இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை கொள்ளாத, உல்லாசப் பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர், இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE