3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகார விவகாரம் - மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக மா.சுப்ரமணியன் பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை குறித்து மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா, உலக புகையிலை ஒழிப்பு தினம், மாநில அளவிலான துணை இயக்குனர்களுக்கான தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் திட்ட பயிலரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழகத்தில் ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி மருத்துவமனைகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது போல தொடர்ச்சியாக செய்தி வெளியாகி வருகிறது. ஏற்கனவே அவர்கள் என்ன என்ன குறை சொல்லி தடை செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளோம். கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் சார்பில் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து என்எம்சிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருகின்ற 4ம் தேதி காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை கூட்டமும் நடைபெறுகிறது.

இதுமட்டுமின்றி, மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். முதல்வர் சென்னை வந்தவுடன் அனுமதி பெற்று தானும் துறையின் செயலாளரும் மத்திய அமைச்சர்களை டெல்லி சென்று சந்திக்க உள்ளோம். ஏற்கனவே மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மூன்று கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் மட்டும் இல்லாமல், திருச்சியில் AIMS சித்த மருத்துவ கல்லூரி வழங்கவும், புதிய மருத்துவமனை திறப்பு மற்றும் நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE