கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரிந்த அரிசிக் கொம்பன் என்ற காட்டுயானையை வனத் துறையினர் கடந்த ஏப்.29-ல் மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையின் வனப்பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் விட்டனர்.
இந்த யானை, நேற்று முன்தினம் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. தெருக்களில் ஓடிய இந்த யானையைப் பார்த்து மக்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். மக்களின் பாதுகாப்புக் கருதி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
யானையை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக அனுப்புவது குறித்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி (ஊரகத் துறை), மதிவேந்தன் (வனத்துறை) ஆகியோர் கம்பத்தில் முகாமிட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, அரிசிக் கொம்பன் யானையைப் பிடிப்பதற்காக கோவை மாவட்டம் ஆனைமலை, டாப் ஸ்லிப் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. நேற்று அதிகாலை அரிசிக் கொம்பன் யானை மெல்ல இடம்பெயரத் தொடங்கியது. சுருளிப்பட்டி, கூத்தனாட்சி ஆறு வழியே நடந்து மேகமலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இருப்பினும், வனத் துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சாட்டிலைட் ரேடியோ காலர் சமிக்ஞை மூலம் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.