சிவகங்கையில் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை: 10 மின்கம்பங்கள், 100 மரங்கள் சாய்ந்தன

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கையில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் 10 மின்கம்பங்கள், 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு சிவகங்கை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அண்ணாநகர், சீனிவாச நகர், ஆயுதப்படை குடியிருப்பு, மதுரைமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றால் சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் மின்கம்பம் ஒடிந்து சாலையோரத்தில் இருந்த மந்தை சாவடி மீது விழுந்தது.

சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே நகர் ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலை மூடியபடி விழுந்து கிடந்த மரம்.

இதில் மந்தைசாவடி மேற்கூடை ஓடுகள் சேதமடைந்தது. சாலையின் குறுக்கே மின்கம்பம் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் 2 மின்கம்பங்கள் ஒடிந்து சாய்ந்தபடி இருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததோடு, அவர்கள் வரும் வரை ஓடிந்த மின் கம்பங்கள் அருகே யாரும் செல்லாதபடி பார்த்துக் கொண்டனர். இதுதவிர அப்பகுதியில் அரசு பள்ளி வளாகம் உட்பட 10 -க்கும் இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சிவகங்கை நகரில் துணை மின்நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் வேரோடு மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்தது.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் மழையால் மின்கம்பம் ஒடிந்து மந்தைசாவடி மீது விழுந்தது.

நவுரோஜி தெருவில் உள்ள மின்கம்பமும் ஒடிந்து விழுந்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் பல மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகம் அருகே நகர் ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மரம் சாய்ந்து, நிலையத்துக்குள் யாரும் செல்ல முடியாதபடி மூடியது. இதுதவிர மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் முன்பு, டிஎஸ்பி அலுவலம் முன்பு, பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு, சிபி காலனி, ஆயுதப்படை குடியிருப்பு, அண்ணாமலை நகர், மஜித் ரோடு, ரயில்வே சப்வே உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

பல இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்ததால் , போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தகர மேற்கூரைகள் சேதமடைந்து, மழைநீர் புகுந்தன. இதையடுத்து சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்களும், சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர் சிவகங்கை அரண்மனைவாசல், பேருந்துநிலையம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சென்றதால் மக்கள் சிரமமடைந்தனர். மேலும் கடை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

​​சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு, சாலையில் சாய்ந்த மரம்.
​​​​​

சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றாததே காரணம்: சிவகங்கை நகர், காஞ்சிரங்கல் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களே ஒடிந்து சாய்ந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்தபோது அவ்வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மழைக்காலம் தொடங்க உள்ளநிலையில், சேதமடைந்த மின்கம்பங்கள் சாய்வதற்கு வாய்ப்புள்ளன. இதனால் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றவும், மின்கம்பிகளை ஒட்டிய மரக்கிளைகளை வெட்டிவிடவும் மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE