ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-01 செயற்கைக்கோள்

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் இந்தியாவின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-01 செயற்கைக் கோள் நாளை காலை விண்ணில் செலுத்தப்படுகிறது.

அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, இந்தியாவில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக கடந்த 2013 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் ரூ.1,420 கோடி செலவில் ஐஆர்என்எஸ்எஸ் வகையில் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என 7 வழிகாட்டுதல் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக ‘நாவிக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. இதன்மூலமாகவே நம் நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையே, முதலில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக் கோள் பழுதானதால், அதற்கு மாற்றாக 2017-ல் 1எச் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அதை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாததால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. பிறகு, 1ஏ-வுக்கு மாற்றாக 1ஐ செயற்கைக் கோள் கடந்த 2018-ல் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

அந்த வகையில், தற்போது, 1ஜி செயற்கைக் கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-01 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் நாளை (மே 29) காலை 10.41 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், ராக்கெட் ஏவுதலுக்கான 27 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் இன்று காலை 7.21 மணிக்கு தொடங்குகிறது.

நாளை விண்ணில் பாய உள்ள என்விஎஸ்-01 செயற்கைக் கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE