புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் திமுக, கூட்டணி கட்சிகளுடன் பங்கேற்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாடாளுமன்றக் கட்டிடத்தை கட்சி, அதை திறப்பது ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டாகும். இதை பிரதமர்திறந்து வைப்பது ஜனநாயகத்துக்கு உட்பட்டதுதானே தவிர, நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வரும் 100 ஆண்டுகளுக்கு மேல் எவ்விதமான இடையூறுமின்றி, நவீனத் தொலைதொடர்பு வசதிகளுடன் செயல்படும்.

இதில் முக்கிய அம்சமாக, தமிழகத்திலிருந்து 75 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட செங்கோலை வைக்க உள்ளனர். இந்த செங்கோல், ஆட்சி நேர்மையானதாகவும், நீதி பிறழாமல் அமைய வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

செங்கோல் தமிழகத்துக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாகும். இது தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், பறைசாற்றுகிறது. எனவே, தமிழக ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடனும், அக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE