தமிழகத்தில் வளர்ச்சி, நலத்திட்டப் பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: வளர்ச்சிப் பணிகளை விரைவுப்படுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை விவரம்: மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

> கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமைச்சருமான ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

> திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

> மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.

> சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

> சேலம் - கே.என் நேரு; தேனி - ஐ.பெரியசாமி; திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி - எ.வ.வேலு; தருமபுரி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; தென்காசி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்; ராமநாதபுரம் - தங்கம் தென்னரசு; காஞ்சிபுரம் - தா.மோ.அன்பரசன்; திருநெல்வேலி - ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்; கோயம்புத்தூர் - செந்தில்பாலாஜி; பெரம்பலூர்- எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தஞ்சாவூருக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers ) மற்றும் அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE