காரைக்குடி | ஹோட்டல்களில் கெட்டுபோன இறைச்சியில் பிரியாணி - அதிகாரிகள் ரெய்டில் அதிர்ச்சி

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: காரைக்குடியில் பிரபல ஹோட்டல்களில் கெட்டுபோன இறைச்சி மற்றும் மசாலாவை பயன்படுத்தி தயாரித்த பிரியாணியை விற்பனை செய்ததால் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரைக்குடி அம்பாள்புரத்தில் மற்றும் புதிய பேருந்து நிலையம் பின்புறம் பிரபல தனியார் ஹோட்டல்கள் உள்ளன. இந்த இரு ஹோட்டல்களுக்கும் தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. பிரியாணிக்கு பிரபலமான இந்த இரு ஹோட்டல்களிலும் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது இரு ஹோட்டல்களிலும் கெட்டுபோன இறைச்சி மற்றும் மசாலாவை பயன்படுத்தி பிரியாணி தயாரித்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இரு ஹோட்டல்களிலும் குளிர்சாதன பெட்டியில் இருந்த கெட்டுபோன 80 கிலோ ஆடு, கோழி கறிகள் மற்றும் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் மதுக்கூடத்திலும் ஆய்வு செய்தனர். தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 10 கிலோ கோழிக்கறி மற்றும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, உணவுப்பொருட்களை அதிகாரிகள் கொட்டி அழித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE