இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக மதுவிற்ற 2 மதுக்கூடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் திறந்தவெளியில் ஊமத்தங்காய் சாறு கலந்த மதுவை விற்ற ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சாலைக்கிராமம் அருகே மதுக்கூடங்கள் கூடிய 2 அரசு மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் மதுக்கடை திறக்காத நேரங்களில் மதுக்கூடங்களிலும், அதனையொட்டி திறந்தவெளியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து சட்டவிரோதமாக மது விற்ற 2 மதுக்கூடங்களுக்கும் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் திறந்தவெளியில் சட்டவிரோதமாக மதுவோடு அதிக போதைக்காக ஊமத்தங்காய் சாறு கலந்து விற்ற தெற்கு வலசைக்காட்டைச் சேர்ந்த ராஜாவை (47) சாலைக்கிராமம் போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக தெற்குவலசையைச் சேர்ந்த ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.