எனது வாகனம் செல்லும்போது மக்களை நிறுத்த வேண்டாம் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: எனது வாகனம் செல்லும்போது மக்களை நிறுத்த வேண்டாம் என்று போக்குவரத்து போலீஸாருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஜிப்மர் அருகேயுள்ள தனது வீட்டிலிருந்து சட்டப்பேரவைக்கு முதல்வர் ரங்கசாமி காரில், பாதுகாப்பு வாகனத்துடன் வருவார். இதுவரை அவர் வரும்போது மக்களை நிறுத்துவது வழக்கமாக இல்லை. அவரது வாகனம் இயல்பாக சென்றுவிடும். அண்மைக் காலமாக முதல்வர் வீட்டிலிருந்து கிளம்பியது முதல் சட்டப்பேரவை வரும் வரை, பல சாலைகளில் மக்களை போலீஸார் நிறுத்தி விடுகின்றனர்.

முதல்வர் வரும்போது குழந்தைகளுடன் செல்வோர் தொடங்கி பணிக்கு செல்வோர் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதல்வர் வரும் நேரத்தில் டிராபிக் சிக்னல் நிறுத்தப்பட்டு அவர் வாகனம் சென்றவுடன்தான் இயக்கப்படுவதால் நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும் மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி போக்குவரத்து போலீஸாருக்கு புதிய உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். அதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் கேட்டதற்கு, "முதல்வர் வாகனம் செல்லும் நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் பலரும் வெயிலில் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை முதல்வரும் நேரில் பார்த்தார். அதனால் போக்குவரத்து போலீஸாரை அழைத்து தனது வாகனம் செல்லும் நேரத்தில் யாரையும் நிறுத்த வேண்டாம். வாகனம் செல்லும் நேரத்தில் மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம். இனி எனது வாகனமும் போக்குவரத்து சிக்னலில் நின்றே செல்லும். அதை கடைபிடியுங்கள் என்று உத்தரவிட்டார்" என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE