பொதுத்தேர்வில் சம அளவில் மதிப்பெண் பெற்ற தருமபுரி இரட்டையர் மாணவிகள்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் சமமான மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் அருகிலுள்ள சின்ன கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மனைவி தீனா. கூலித் தொழிலாளிகளான இந்த தம்பதியருக்கு 2007-ம் ஆண்டில் இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த இரட்டை குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

இரட்டையர்களான ரமாதேவி, லட்சுமி தேவி ஆகிய இருவரும் கடந்த கல்வியாண்டில் டி.காணிகர அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். கடந்த வெள்ளிக் கிழமை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த இரு மாணவியரும் 500-க்கு 347 என சமமான அளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இரட்டையர்களான இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே அளவிலான மதிப்பெண் பெற்றிருப்பது பள்ளி வட்டாரத்தில் சுற்று வட்டார கிராமங்களிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள் இந்த மாணவியரின் வீடு தேடி வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மாணவியர் இருவரும் இது பற்றி கூறும்போது, "பள்ளியில் ஒரே பென்ச்-ல் அருகருகே தான் இருவரும் அமர்ந்து படித்தோம். ஆனால், இருவருக்கும் ஒரே அளவிலான மதிப்பெண் கிடைத்திருப்பது எங்களுக்கும் ஆச்சர்யம் தான். நாங்கள் இவ்வாறு மதிப்பெண் எடுக்கக் காரணமாக அமைந்த எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், கூலி வேலைக்கு சென்று எங்களை படிக்க வைக்கும் எங்களின் பெற்றோருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறோம்" என கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE