மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இச்சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் உள்ளிட்ட இடங்களில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உள்பட 13 பேர் இறந்தனர். மருத்துவமனைகளில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஒரு பெண் உட்பட 35 பேர் பொது மருத்துவப் பிரிவிலும் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று முன்தினம் 7 பேர் சிகிச்சை நிறைவு பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரக்காணம், செல்லன் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன்(42) என்பவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் சில நாட்களுக்கு முன்புகள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகவும், அவரையும் கள்ளச்சாராய இறப்பில் இணைக்க வேண்டும் எனவும் கோரி அவரதுஉறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன், முத்து, ஆறுமுகம், ரவி உள்ளிட்ட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE