“கள்ளச் சாராய இறப்பு தொடர்பாக திமுக அமைச்சர்கள் தவறான தகவல் அளிக்கின்றனர்” - தங்கமணி குற்றச்சாட்டு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: “கள்ளச் சாராய இறப்பு தொடர்பாக திமுக அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்” என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இது குறித்து அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் ஏற்கெனவே நடைபெற்ற அதிமுக ஆட்சியிலும் கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றது என கூறியுள்ளனர். ஆனால் பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச் சாராய சாவு இல்லை என்று அறிக்கை வாசித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் மற்றும் விஷ சாராயம் விற்பனையும் நடைபெறவில்லை. அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டதில்லை. திமுக அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் தவறான தகவல்களை தெரிவிப்பதை கைவிட்டு பொதுமக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 19,387 மெகாவட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாகவும், தமிழகத்தில் மின்வெட்டு எங்கும் இல்லை, மின்சாரத் தடை தான் இருக்கிறது என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் 13 துணை மின் நிலையங்களை அதிமுக அரசு ஏற்கெனவே அமைத்து வைத்ததை திமுக அரசு தொடங்கி வைத்துள்ளது. தற்போது தமிழகத்தில் 19,387 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதற்கு அதிமுக ஆட்சியில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி டவர் கிரிட்லைன் மின்பாதை அமைத்ததுதான் காரணம்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பட்டியலின பெண் சாரதா என்பவர் இருந்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர் செந்தில்குமார் என்பவர், அத்துமீறி தலைவர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை நடத்தியுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் என்பதால் மாவட்ட ஊராட்சி தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்தத் தவறை செய்த திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மீது திமுக கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜேடர்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்தால் மட்டுமே பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

நாமக்கல்லில் ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக கொடிகளை கட்டியுள்ளனர். குமாரபாளையம் பகுதிகளிலும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. இது குறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். இதன்மூலம் ஒபிஎஸ் அணி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. அதிமுக நிச்சயம் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE