சென்னை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் வரும் 20-ம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை மகளிர் அணியினர் முன்நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், பாஜக மாநில ஊடக பிரிவுதலைவர் ரங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமாக திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் மாநில மகளிர் அணி சார்பில் வருவாய் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தந்த மாவட்ட மகளிர் அணி தலைவி தலைமையேற்பார். சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என கூறியுள்ளார்.