திண்டுக்கல்: “விஷச் சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் வழங்குவது என்பது அதை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது” என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''போகர் ஜெயந்தி விழா நடத்தக்கூடாது என கோயில் இணை ஆணையர் தடை விதித்தார். நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியும் அவர் விழாவுக்கு பல்வேறு இடையூறுகள் கொடுத்தார். பழநி முருகன் கோயிலில் ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடக்கவில்லை என சொல்கிறார்கள். அதன் விளைவாக தான் தற்போதைய அரசுக்கு கேடு விளைந்து கொண்டு இருக்கிறது.
விஷச் சாராயம் குடித்து பலர் இறந்துள்ளனர். இதில் அரசும், உளவுத் துறையும் போதிய கண்காணிப்பு இல்லை. அரசு சரியாக செயல்பட்டால்தான் அதிகாரிகளும் நேர்மையாக இருப்பார்கள். விஷச் சாராயம் குடித்து இறந்தால் ரூ.10 லட்சம் வழங்குவது என்பது, அதை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதை இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.
பழநி முருகன் கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு, ஏராளமான பக்தர்கள் லட்சக்கணக்கில் நிதியும், பொருட்களும் நன்கொடையாக கொடுத்துள்ளனர். இதில் ஊழல் நடந்திருப்பதாக மக்கள் பேசி கொள்கிறார்கள். எனவே, கும்பாபிஷேக வரவு, செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்றார்.