கள்ளச்சாராய மரண வழக்குகள்: சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச்சாராய மரண வழக்குகளுக்கான விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023) வரை 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண் 225/2023, சட்டப்பிரிவுகள் 120 (b), 328, 304(i) IPC r/w 7, 4(1)(i)4(1)(A)(i) TNP Act 1987-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதோடு செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண் 137/2023, சட்டப்பிரிவுகள் 174 Cr.PC@ 4(1A)TNP Act and 284,328,304(ii) IPC மற்றும் குற்ற எண் 138/2023, சட்டப்பிரிவுகள் 174 Cr.PC@ 4(1A)TNP Act and 284,328,304(ii) IPC-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளன.

இந்த வழக்குகளை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்குகளுக்கான விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, எக்கியார்குப்பம் வழக்கை ஏடிஎஸ்பி கோமதி, செங்கல்பட்டு வழக்கை ஏடிஎஸ்பி மகேஸ்வரி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE