மதுரை எய்ம்ஸ் கட்டுமான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்கிறோம் - மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

By என்.சன்னாசி

மதுரை: திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.

அந்த மனுவில், ‘மதுரை தோப்பூர் பகுதியில் அமையும் எய்ம்ஸ் கட்டுமானத்தை தொடங்கி முதற்கட்ட கட்டுமான பணியை விரைந்து முடித்து, 2023 ஆண்டுக்கான 2ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும். வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார்.

எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் இந்த மனுவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், "தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதான் மந்திரி சுவாஷ்தியா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஜப்பான் நாட்டின் ஜிக்கா ஏஜென்சியுடன் கடனுதவிக்கான ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்படும். கட்டுமான பணியை விரைவில் தொடங்க வசதியாக முதன்மை இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்) கண்காணிப்பு மற்றும் முதன்மை பொறியாளர், நிர்வாக அதிகாரி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க அனைத்து முன்னேற்பாடுகளும் மத்திய அரசு துரிதமாக செய்கிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE