கும்பகோணம் | வாகனங்களை விரட்டி, விபத்தில் உயிரிழந்த குட்டியை தூக்கிச் சென்ற தாய் குரங்கு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், கொரநாட்டுக்கரூப்பூர், அபிராமி சுந்தரேஸ்வரர் கோயில் மேலவீதியில் வாகன விபத்தில் உயிரிழந்த குட்டி குரங்கு, உயிருடன் இருப்பதாகக் கருதி வாகனங்களில் சென்றவர்களை விரட்டி, குட்டியை தூக்கிச் சென்ற தாய் குரங்கால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டது.

கும்பகோணம் சுற்றுச்சாலையிலிருந்து சென்னைச் சாலை செல்வதற்கு, இந்த மேலவீதி வழியாக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகமாகச் சென்று வருகிறது.

இந்நிலையில் காலை, அந்த சாலை வழியாக கார் ஒன்று வேகமாக சென்ற போது, சாலையின் குறுக்கே சென்ற குரங்கு குட்டியின் மீது மோதியது, இதில் குரங்கு குட்டி தலையில் அடிபட்டு, அதே இடத்தில் உயிரிழந்தது.

இதனையறிந்த அங்குள்ள மரத்திலிருந்த தாய் குரங்கு, குட்டியை கூச்சலிட்டு அழைத்த போது, வராததால், அந்த வீதியின் வழியாகச் செல்லும் வாகன ஒட்டிகளை மிரட்டி, விரட்டியது. இதனால் வாகனங்கள் அந்த வழியாகச் செல்லாமல் இருப்பக்கங்களிலும் நின்றன.

இதனைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காக, அதனை தூக்கிக் கொண்டு மரத்தின் மீதேறி சென்றது. உயிரிழந்த குட்டியை, உயிருடன் இருப்பதாகக் கருதி தூக்கிச் சென்ற தாய் குரங்கின் நிலையை, அங்கிருந்தவர்கள் மிகவும் பரிதாபத்துடன் பார்வையிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE