முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: துணை கண்காணிப்பு குழு தகவல்

By செய்திப்பிரிவு

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப கசிவு நீர் மிகத் துல்லியமாக இருப்பதால், அணை பலமாக உள்ளது என, துணை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, உச்ச நீதிமன்றம் கண்காணிப்புக் குழுவை நியமித்தது. இக்குழு வுக்கு உதவியாக, துணை கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டது. இதன் தலைவராக, கொச்சி யிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார்.

தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்டச் செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவிச் செயற் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவிப் பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். நேற்று இக்குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, அணையின் கசிவுநீர் குறித்தும் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர், துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள உயர்நிலை கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மதகுகளை இயக்கி பார்த்ததில், அதன் இயக்கம் சீராக உள்ளன. அதுபோல், அணையின் கசிவுநீர் நிமிடத்துக்கு 25.68 லிட்டர் இருந்தது.

இது, இன்றைய (நேற்று) நீர்மட்டம் 118 அடிக்கு ஏற்ப மிகத்துல்லியமான அளவாகும். இதன்மூலம், அணை பலமாக இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE