வெறுப்பு அரசியல் சக்திகளின் ஊடுருவல்: நாமக்கல் சம்பவம் குறித்து முத்தரசன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “வட மாநிலங்களிலிருந்து வேலை தேடி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ள நிலையில், மோதலை உருவாக்கும் வெறுப்பு அரசியல் சக்திகளின் ஊடுருவல் குறித்து விசாரித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிப்பு தொழிலகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். நேற்று முன்தினம் (13.05.2023) இவர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்து, உள்ளே மண்ணெண்ணெய் நனைத்த துணியில் தீ வைத்து வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நான்கு வட மாநிலத் தொழிலாளர்கள் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து இப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதுடன் ஆங்காங்கு சில தீ வைப்பு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இதன்மீது காவல் துறை இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். வட மாநிலங்களிலிருந்து வேலை தேடி தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ள நிலையில், மோதலை உருவாக்கும் வெறுப்பு அரசியல் சக்திகளின் ஊடுருவல் குறித்து விசாரித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE