கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: இபிஎஸ் 

By செய்திப்பிரிவு

திருச்சி: கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் குடித்த பலர் மரணம் அடைந்த செய்தி வேதனையையும், அதிர்ச்சியும் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ந்து நான் கூறி வருகிறேன். பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் இப்படிப்பட்ட கொடுமைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து வருகிறேன்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி வருகிறது என்று காவல் துறை மானியக் கோரிக்கையில் நான் பேசினேன். இதை அரசு, சரியான முறையில் கவனத்தில் எடுத்துக் கொண்டு இருந்தால் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இதற்கு எல்லாம் முழு பொறுப்பு தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான். எனவே தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கள்ளச்சாராயம், போதை பொருள், கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க 2.O, 3.O என்று ஓ போடுவது தான் இவர்களின் வழக்கமாக உள்ளது. சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து இதை தடுக்க முடியவில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE