மத்திய அரசு இயற்கை எரிவாயு விலை குறைப்பு: மின்னுற்பத்தி செலவு குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு இயற்கை எரிவாயு விலையை குறைத்துள்ளதால், மின்வாரியத்துக்கு எரிவாயு மின்னுற்பத்தி செலவு 25 சதவீதம் வரை குறைந்துள்ளது.

தமிழக மின்வாரியத்துக்கு சென்னை பேசின்பிரிட்ஜில் 120 மெகாவாட், ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் 187 மெகாவாட், நாகை மாவட்டம் குத்தாலத்தில் 101 மெகாவாட், திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் 108 மெகாவாட் திறனில் எரிவாயு மின்நிலையங்கள் உள்ளன.

சென்னையில் இயற்கை எரிவாயு கிடைக்காததால் பேசின்பிரிட்ஜ் மின்நிலையத்தில் நாப்தா பயன்படுத்தியும், மற்ற மின்நிலையங்களில் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஒஎன்ஜிசி) நிறுவனத்திடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்கிப் பயன்படுத்தியும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மின்நிலையங்களில் தினமும் சராசரியாக 50 முதல் 50 லட்சம் யூனிட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. எரிவாயு கொள்முதல் விலை மெட்ரிக் மில்லியன்பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (எம்எம்பிடியூ) என்ற பெயரில் கணக்கிடப்படுகிறது. இதன்படி, ஒரு எம்எம்பிடியூ எரிவாயு விலை ரூ.702 ஆக இருந்தது.

மின்வாரியம் தினமும் 53 ஆயிரம் எம்எம்பிடியூ மதிப்புள்ள எரிவாயுவை பயன்படுத்துகிறது. ஒரு யூனிட் எரிவாயு மின்னுற்பத்தி செலவு ரூ.8 வரை இருந்தது. தற்போது, மத்திய அரசு ஒரு எம்எம்பிடியூ எரிவாயு விலையை ரூ.533 ஆக குறைத்துள்ளது. இதையடுத்து, எரிவாயு மின்நிலையங்களில் ஒரு யூனிட் மின்னுற்பத்தி செலவு ரூ.6 ஆக குறைந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக மின்வாரியத்துக்கு 25 சதவீதம் வரை செலவு மிச்சமாகி உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE