ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்றதாக 9 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 9 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கொத்தா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று(ஞாயிறு) நடைபெறுவதையொட்டி டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

அதன்பேரில், டி1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் நேற்று சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன் மற்றும் சில இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முத்துஜா, அஜித், விஷால் ராஜ், பரத், விவேக், ஆஷிஷ், அபிஷேக், திருப்பதி, முகிலன் ஆகிய 9 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 17 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.13,350 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 9 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE