திராவிட மண்ணில் பாஜக வரமுடியாது என தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்கிறார்: எல்.முருகன்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்லி வருகின்றார் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று ராஜ்பவன் தொகுதி வைத்திகுப்பம் பகுதியில் நடந்த மீனவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக் கூறி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தமிழகத்தில் கூட திமுக பலமுறை தூக்கி எறியப்பட்டது. எம்.ஜி.ஆர் இருந்தபோது திமுக வெற்றி பெறுவதே கடினமாக இருந்தது. கருணாநிதி ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆகவே ஒரு தேர்தலை வைத்து மட்டுமே மற்ற விஷயங்களை சொல்ல முடியாது.

தமிழகம், புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். புதுச்சேரியில் பாஜகவின் தேசிய ஜனநாயக ஆட்சி நடக்கிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளோம். எனவே, திராவிட மண்ணில் பாஜக வரமுடியாது; பாஜக துடைத்தெரியப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை. தனது திருப்திக்காக இதுபோன்று அவர் சொல்லி வருகின்றார். உண்மையில் இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் 2018-ல் பாஜகவின் வாக்கு சதவீதம் எப்படி இருந்தததோ, அதே போன்ற வாக்கு சதவீதம் இப்போதும் உள்ளது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE