கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழப்பு - தமிழக அரசுதான் பொறுப்பு என இபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகின்றன. மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன், சிகிச்சை பெற்று வருவோரை கவனத்துடனும் அக்கறையுடனும் கவனித்து அவர்களின் உயிரை காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்,

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் கள்ளச்சாராய கலாச்சாரம் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதே மரக்காணம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தீவிரமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதமே செய்திகள் வந்தன. அவற்றை அறிந்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தற்போது நிகழ்துள்ள இந்த மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனியாவது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க நடவடிக்கைகளை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE