சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் - பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மகளிர் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்களின் பொருளாதார சுயசார்புக்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்புவழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தி, சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எட்டவும், சுயஉதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தரவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையேநேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினியும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நிராஜ் பாண்டாவும் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் பா.பிரியங்கா பங்கஜம், பாரத வங்கியின் துணைப் பொதுமேலாளர் ஜெகதீஸ்வர் கர்ரி, அரசு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுவதுடன், முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் பிற அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் சுயஉதவிக் குழுக்களின் தகுதியுள்ள பெண் தொழில்முனைவோருக்கு பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் கடன் வசதிகளை வழங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE