திருநெல்வேலி | பறை இசை கருவிகளுடன் அரசு பேருந்தில் பயணித்த மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் பணியிடை நீக்கம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவி ரஞ்சிதா. இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படிக்கிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது சொந்த ஊரிலிருந்து பறை இசைக்கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார்.

நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று முன்தினம் இரவில் சொந்த ஊருக்கு பறை இசைக்கருவிகளுடன் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினார்.

அப்போது இசைக் கருவிகளைக் கொண்டு செல்ல அப்பேருந்தின் நடத்துநர் ஆர்.கணபதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து மாணவியிடம் வாக்குவாதம் செய்து, தகாத வார்த்தைகளால் நடத்துநர் திட்டியதாக தெரிகிறது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து 2 கி.மீ. தொலைவில் வண்ணார்பேட்டைக்கு வந்த போது, பேருந்திலிருந்து நடுவழியில் மாணவி ரஞ்சிதா இறக்கிவிடப்பட்டார்.

பாதி வழியில் தன்னந்தனியாக இறக்கிவிடப்பட்ட மாணவி கண்ணீருடன் காத்திருந்தது குறித்து தெரிய வந்ததும், தன்னார்வலர்களும், செய்தியாளர்களும் அங்குவந்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் மற்றொரு பேருந்தில் அவரை பறை இசைக்கருவிகளுடன் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நடத்துநர் கணபதியை பணியிடை நீக்கம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE